லண்டனில் தீபாவளிக் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட தீவிபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மேற்கு லண்டனின் ஹவுன்ஸ்லோவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த குடும்பம் வசித்து வந்தது. கடந்த 12-ம் தேதி தீபாவளி பண்டிகை தினத்தன்று இரவு 10.30 மணியளவில் இவர்கள் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீடிரென தீ விபத்து ஏற்பட்டது. இத்தீ மளமளவென 2 மாடிகளுக்கும் பரவியது. இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்ததாக காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.
மேற்கண்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் ஆரோன் கிஷன் என்பவர் தனது மனைவி சீமா ராத்ரா, 3 குழந்தைகள் மற்றும் தனது தாயாருடன் வசித்து வந்திருக்கிறார். தீபாவளிப் பண்டிகையை ஒட்டி, அப்பகுதியில் ஏராளமான பட்டாசுகள் வெடித்திருக்கிறார்கள். அப்போது ஏற்பட்ட விபத்தில் ஆரோன் கிஷன் பலத்த தீக்காயமைடந்த நிலையில், அவரது மனைவி மற்றும் குழந்தைகள், உறவினர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்துவிட்டனர்.
படுகாயங்களுடன் உயிர் பிழைத்த ஆரோன் கிஷன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தீவிபத்து குறித்து தகவலறிந்ததும் காவல்துறையினரும், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். எனினும், ஆரோன் கிஷனைத் தவிர மற்ற யாரையும் காப்பாற்ற முடியவில்லை. தீபாவளிக் கொண்டாட்டத்தின்போது பட்டாசு வெடித்ததுதான் தீ விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து காவல்துறை கண்காணிப்பாளர் சீன் வில்சன் கூறுகையில், “இது ஒரு பயங்கரமான சம்பவம். இச்சம்பவத்தின் பின்னணியில் உள்ள காரணத்தைக் கண்டறிய லண்டன் தீயணைப்புப் படை அயராது உழைக்கும்” என்றார்.