மணிப்பூர் மாநிலம் காங்போக்பி மாவட்டத்தில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஐ.ஆர்.பி. வீரர் உட்பட 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 2 பேரும் கூகி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அச்சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மணிப்பூர் மாநிலத்தில் இட ஒதுக்கீடு தொடர்பாக கூகி மற்றும் மெயிட்டி சமூகத்தினருக்கு இடையே கடந்த மே மாதம் 3-ம் தேதி முதல் மோதல் போக்கு இருந்து வருகிறது.
கடந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடருக்கு முன்னதாக, கூகி சமூகத்தைச் சேர்ந்த 2 பெண்களுக்கு எதிரான நடைபெற்ற வன்முறை வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன் தொடர்ச்சியாக அம்மாநிலத்தில் மிகப்பெரிய கலவரம் வெடித்தது. இதில், ஏராளமானோர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து, மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக மாநிலத்தில் அமைதி திரும்பியது.
எனினும், அவ்வப்போது சிறு சிறு சச்சரவுகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம் கூகி சமூகத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் நேற்று இரு பிரிவினருக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் இந்திய ரிசர்வ் பட்டாலியன் (ஐ.ஆர்.பி.) வீரரும், அவரது டிரைவரும் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
ஹராதெல் மற்றும் கோப்ஷா கிராமங்களுக்கு இடையே இந்த மோதல் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. இச்சம்பவத்தில் உயிரிழந்த இருவருமே கூகி சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
ஆகவே, காங்போக்பி மாவட்டத்தைத் தளமாகக் கொண்ட பழங்குடியினர் ஒற்றுமை குழு, தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் காங்போக்பி மாவட்டம் முழுவதும் உடனடி கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டது.
அப்போது, மணிப்பூரில் பழங்குடியின சமூகங்களுக்கு தனி நிர்வாக அமைப்பை நிறுவ வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டு வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.