தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் தொகுப்பூதிய செவிலியர்களுக்குப் பணியிட மாற்ற கலந்தாய்வு வெளிப்படைத்தன்மை இல்லாமல் நடைபெற்று வருவதாகப் புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக, தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்க பொதுச் செயலாளர் சுபின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் தொகுப்பூதிய செவிலியர்களுக்குப் பணியிட மாற்ற கலந்தாய்வு 20-ம் தேதி முதல் முதல் 22-ம் தேதி வரை நடத்தப்படுகிறது. ஆனால், இந்த பணியிட மாற்ற கலந்தாய்வில் வெளிப்படை தன்மை இல்லை.
கலந்தாய்வில் ஏற்கனவே இருந்த காலி பணியிடங்கள் பட்டியலில் காண்பிக்கப்படாமல் ஒரு சில இடங்கள் மட்டுமே காண்பிக்கப் பட்டுள்ளது.
குறிப்பாக, ஈரோடு மாவட்டம் பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 80 பணியிடங்கள் காலியாக இருந்த நிலையில், வெறும் இரண்டு பணியிடங்கள் மட்டுமே கலந்தாய்வில் காண்பிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில், 27 காலி பணியிடங்களுக்கு 6 பணியிடங்களும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 45 பணியிடங்களுக்கு வெறும் 9 பணியிடங்களும், தருமபுரி மாவட்டத்தில் 56 பணியிடங்களுக்கு வெறும் 16 பணியிடங்கள் மட்டுமே கலந்தாய்வில் காண்பிக்கப்பட்டுள்ளது. இது போல், தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களில் இதே போன்ற நிலைதான் பின்பற்ற பட்டுள்ளது.
மேலும் பணியிட மாற்ற கலந்தாய்வு விண்ணப்பங்கள் கொடுத்த பல செவிலியர்களின் பெயர் கலந்தாய்வு பட்டியலில் இடம் பெறாமல் அந்தச் செவிலியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கடந்த காலங்களில் நடந்த கலந்தாய்வுகளில் முதல் நாளில் பங்கு பெற்று வேறு பணியிடத்தைத் தேர்வு செய்த செவிலியர்களின் பணியிடங்களைக் காலி பணியிடங்களாக அறிவித்து மீண்டும் அந்தப் பணியிடங்களைச் செவிலியர்கள் தேர்வு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது. அதுவும் இந்தக் கலந்தாய்வில் மறுக்கப்பட்டுள்ளது.
தற்போது வெளிப்படை தன்மையற்ற பல குறைகளுடன் நடத்தப்படும் கலந்தாய்வால் செவிலியர்கள் மிகவும் வேதனையில் உள்ளனர்.
இதனால், பெரும்பாண்மையான செவிலியர்கள் பணியிடம் ஏதும் தேர்வு செய்யாமல் வருத்தத்துடனும் பெரும் ஏமாற்றத்துடனும் சென்றுள்ளனர். இது அரசுக்கு மிகவும் அவப்பெயரை ஏற்படுத்தும்.
எனவே, இந்த விவகாரத்தில் குறைகளைக் களைந்து அனைத்து பணியிடங்களையும் வெளிப்படையாகக் காண்பிப்பதுடன் அனைத்து செவிலியர்களின் பெயர்களும் பட்டியலில் இடம் பெறவும் முதல் நாளில் காலியாகும் பணியிடங்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து செவிலியர்களுக்குப் பயன் பயக்கும் விதமான கலந்தாய்வை மீண்டும் நடத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.