சந்திரயான் – 4 மூலம் நிலவில் உள்ள மணல், கற்களை பூமிக்கு எடுத்துவர புதிய திட்டம்.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ கடந்த ஜூலை மாதம் சந்திரயான் 3 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவருடன் சுமார் 40 நாட்களுக்கும் மேலாக விண்ணில் பயணித்த சந்திரயான் 3 விண்கலம் கடந்த ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி நிலவின் தென் துருவத்திற்கு அருகே சுமார் 600 கிலோ மீட்டர் தொலைவில் வெற்றிகரமாக தரை இயங்கி பணிகளை செய்தது.
இந்நிலையில் ஜப்பானுடன் சேர்ந்து இஸ்ரோ, சந்திரயான் 4 திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தது. இந்த சந்திரயான்-4 திட்டம் லூபெக்ஸ் என்ற பெயரில் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்நிலையில் இத்திட்டத்தில் ரோபோட் தொழில் நுட்பத்திலான ரோவர் மற்றும் லேண்டரை நிலவுக்கு அனுப்பி ஆய்வு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ரோபோட் திட்டத்தின் மூலம் நிலவின் மேற்பரப்பில் உள்ள மாதிரிகளை சேகரித்து அவற்றை பூமிக்குக் கொண்டு வந்து ஆய்வு செய்யவும் இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. மேலும் சந்திரயான்-4 திட்டத்தில் லேண்டரை இந்தியாவும், ரோவரை ஜப்பானும் வடிவமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சந்திரயான் 4 திட்டத்தின் மூலம் அனுப்பப்படும் லேண்டர் மற்றும் ரோவரின் ஆயுட் காலத்தை 6 மாதமாக நிர்ணயிக்கவும் இஸ்ரோவும் ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனமும் திட்டமிட்டுள்ளன.
சந்திரயான் 3 திட்டத்தை விட அதிக சவால்கள் நிறைந்த இந்த திட்டத்தில் ரோவரின் எடை மட்டும் 350 கிலோ இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் சந்திரயான் 4 திட்டத்தில் நிலவுக்கு அனுப்பப்படவுள்ள ரோவர் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் இந்த திட்டத்திற்கான அனைத்து பணிகளைவும் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.