உத்தரகாசி சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களை மீட்குப் பணி இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கிறது. இன்னும் ஓரிரு மணி நேரங்களில் 41 தொழிலாளர்களும் மீட்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் சார்தாம் நெடுஞ்சாலைத் திட்டத்தின் ஒரு பகுதியாக சில்க்யாரா-பர்கோட் இடையே சுமார் 4.5 கி.மீ. தூரத்துக்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கடந்த 12-ம் தேதி தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சுரங்கப்பாதையின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதனால், பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளர்கள் சுரங்கப்பாதைக்குள் சிக்கிக் கொண்டனர்.
இதையடுத்து, தொழிலாளர்களை மீட்கும் பணி 12-வது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், மாநில பேரிடர் மீட்புப் படை, இராணுவ பொறியாளர்கள், இந்திய திபெத் எல்லை பாதுகாப்புப் படை உள்ளிட்ட 8 அரசு நிறுவனங்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கின்றன. மேலும், சர்வதேச சுரங்கப்பாதை நிபுணர் அர்னால்ட் டிக்ஸ் வரவழைக்கப்பட்டிருக்கிறார்.
தற்போது, மீட்புக் குழு கிடைமட்ட துளையிடும் இயந்திரத்தைப் பயன்படுத்தி சுரங்கப்பாதையில் குழாய்களை செருகுகிறது, ஆனால், இடையில் இருக்கும் இரும்புக் கம்பிகளை வெட்டுவதில் சிரமங்கள் ஏற்படுகிறது. எனவே, இரும்புக் கம்பிகளை அகற்றுவதற்கு டெல்லியில் இருந்து வெல்டிங் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஆகவே, இன்னும் ஓரிரு மணி நேரங்களில் சுரங்கப்பாதையில் சிக்கி இருக்கும் தொழிலாளர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் (NHIDCL) மீட்பு முயற்சிகளுக்கு தலைமை தாங்கும் கர்னல் தீபக் பாட்டீல் கூறுகையில், “இன்னும் 2 குழாய்களை அமைக்கும் பணி மட்டுமே மீதமிருக்கிறது. இதனிடையே, சுரங்கப்பாதைக்குள் செருகும்போது கடைசிக் குழாயின் முன் பகுதி சேதமடைந்து விட்டது. அதை வெட்டும் பணி நடந்து வருகிறது.
எனினும், இயந்திரத்தால் வெட்ட முடியாத சில இரும்புக் கம்பிகளால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. இரும்புக் கம்பிகளை வெட்டும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படை பணியாளர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். அதேசமயம், டெல்லியிலிருந்து வெல்டிங் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு மணி நேரத்தில் இரும்புக் கம்பிகளை வெட்டி எடுத்து விட்டால், மேலும் 2 குழாய்களை எளிதாக அமைக்க முடியும்” என்றார்.
இதனிடையே, ரூர்க்கியைச் சேர்ந்த தலைமை விஞ்ஞானியும், சுரங்கப்பாதை நிபுணருமான ஆர்.டி.டிவிவேதி, சில்க்யாரா சுரங்கப்பாதையை அடைந்திருக்கிறார். அதேபோல, தொழிலாளர்கள் மீட்கப்பட்டவுடன், அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கும் வகையில், மருத்துவ உபகரணங்களும் சில்க்யாரா சுரங்கப்பாதை தளத்தை வந்தடைந்திருக்கின்றன.
இந்த நிலையில், பிரதமர் அலுவலகத்தின் முன்னாள் ஆலோசகர் பாஸ்கர் குல்பே சில்க்யாரா சுரங்கப்பாதையில் மீட்புப் பணி நடைபெறும் இடத்திற்கு வந்திருக்கிறார். அவர் கூறுகையில், ”நேற்றிரவு துளையிடும்போது, ஒரு இரும்பு உலோகம் தடையாக இருந்தது. இதன் காரணமாக வேலை நிறுத்தப்பட்டது. தற்போது குழாயின் உள்ளே செல்லத் தடையாக இருந்த முழு இரும்பும் அகற்றப்பட்டு விட்டது. இனி வழியில் எந்தத் தடையும் இருக்காது என்று நம்புகிறோம்” என்றார்.
இது குறித்து உத்தரகாசி எஸ்.பி. அர்பன் யதுவன்ஷி கூறுகையில், ”சுமார் 12 மீட்டர் குழாய் பதிக்கும் பணி மட்டுமே மீதமிருக்கிறது. ஆகவே, மீட்புப் பணிகள் கூடிய விரைவில் முடிவடையும் என்று நம்புகிறேன். மீட்புப் பணிகளுக்குப் பிந்தைய செயல் திட்டம் தயாராக இருக்கிறது. தொழிலாளர்களை போலீஸ் துணையுடன் அழைத்துச் சென்று சிறந்த சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்வோம்” என்றார்.
உத்தரகாஷி கலெக்டர் அபிஷேக் ரூஹெலா கூறுகையில், “நாங்கள் பெரும்பாலான தூரத்தை கடந்துவிட்டோம். இன்னும் கொஞ்சம் வேலை மட்டுமே மீதமிருக்கிறது. நாங்கள் எதிர்கொள்ளும் தொழில்நுட்ப சிக்கல்களை சமாளிக்க எங்கள் குழுக்கள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன.
நிபுணர்கள் மற்றும் திறமையான நபர்களிடமிருந்து நாங்கள் ஆலோசனை பெறுகிறோம். எனினும், எப்போது மீட்புப் பணிகள் முடிவடையும் என்று கூற முடியாது. ஆனால், பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன” என்றார்.