சோனியா, ராகுல், ராபர்ட் வதேரா ஆகியோருக்கு நெருக்கமான ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரிக்கு எதிராக அமலாக்கத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் புதிதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது.
பிரிட்டனைச் சேர்ந்தவர் ஆயுத இடைத்தரகர் சஞ்சய் பண்டாரி. இவர், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா ஆகியோருக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.
இவர், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது, கமிஷன் பெற்றதாகவும், சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும், அந்தப் பணத்தை வைத்து லண்டனில் சொத்துக்களை வாங்கிக் குவித்ததாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
இதையடுத்து, சஞ்சய் பண்டாரிக்கு எதிராக, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை, ஆயுத இடைத்தகராக செயல்பட்டது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆகவே, சஞ்சய் பண்டாரியை நாடு கடத்தி வர இந்தியா கோரிக்கை விடுத்திருக்கிறது.
இதனிடையே, கருப்புப் பணத் தடுப்புச் சட்டத்தின் கீழ், சஞ்சய் பண்டாரிக்கு எதிராக 2015-ம் ஆண்டு வருமான வரித் துறை குற்றப்பத்திரிகையை பதிவு செய்தது. இதைத் தொடர்ந்து, சஞ்சய் பண்டாரி உள்ளிட்டோர் மீது பண மோசடி தொடர்பாக 2017 பிப்ரவரியில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கில்தான் அமலாக்கத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் புதிதாக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருக்கிறது. இந்த சம்பவம் காங்கிரஸ் தலைவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.