உலக காலநிலை நடவடிக்கை மாநாட்டில் பங்கேற்பதற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக வரும் 30-ம் தேதி துபாய் செல்வதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “உலக காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கூட்டமைப்பின் 28-வது மாநாடு வரும் 28-ம் தேதி முதல் டிசம்பர் 12 வரை துபாயில் நடைபெறுகிறது.
இம்மாநாட்டின் ஒரு பகுதியாக டிசம்பர் 1, 2-ம் தேதிகளில் உலக காலநிலை நடவடிக்கை உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், அறிவியல் உள்ளிட்ட பல்வேறு தொழில்துறையினர் பங்கேற்கின்றனர்.
ஐக்கிய அரபு அமீரகம் தலைமையின் கீழ் நடைபெறும் இம்மாநாட்டில், கலந்துகொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானின் அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று பிரதமர் மோடி, 2 நாள் பயணமாக வரும் 30-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார்.
அங்கு நடைபெறும் மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி, ஐக்கிய அரபு அமீரக அதிபரையும் சந்தித்து பேசுவார். மேலும், உச்சி மாநாட்டில் பங்கேற்கும் சில தலைவர்களுடன் இரு தரப்பு சந்திப்புகளை நடத்துவார்” என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.