சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பி வைத்துள்ள ஆதித்யா எல்1 விண்கலத்தில் இருக்கும் இரு முக்கிய ஆய்வுக் கருவிகள், செயல்பாட்டை துவங்கி உள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.
சந்திரயான் 3-யின் வெற்றியைத் தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்வதற்காக, கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து, ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை, இஸ்ரோ விண்ணில் ஏவியது.
இது, பூமியில் இருந்து, 15 லட்சம் கி.மீ. துாரம் பயணம் செய்து சூரியனுக்கு மிக அருகில் உள்ள, ‘எல் 1’ எனப்படும், லாக்ராஞ்சியன் புள்ளியில் நிலை நிறுத்த முடிவு செய்யப்பட்டது.
இது குறித்து இஸ்ரோ தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஆதித்யா எல் -1 விண்லத்தில் சோலார் ஸ்பெக்ட்ரோ மீட்டர் என்ற கருவி செயல்பட தொடங்கியுள்ளது.
சூரிய காற்று துகள் கருவியில் புரோட்டான், ஆல்பா துகள்களில் உள்ள எண்ணிக்கை மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளது.
சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பி வைத்துள்ள ஆதித்யா எல்1 விண்கலத்தில் இருக்கும் இரு முக்கிய ஆய்வுக் கருவிகள், செயல்பாட்டை தொடங்கியுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாரத்தில் லெக்ராஞ்சியன் புள்ளி 1ல் ஆதித்யா எல்-1 விண்கலம் நிலநிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.