ஆஸ்திரேலியா சென்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சுமைகள் தூக்க பணியார்கள் இல்லாததால், தங்கள் சுமைகளை தூக்கிச்சென்றனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி எதிர்பார்த்த அளவில் விளையாடாமல் தோல்விகளை சந்தித்து நாடு திரும்பியது.
தோல்விக்கு பொறுப்பேற்று கேப்டன் பாபர் அசாம் தன்னுடைய கேப்டன் பதவியை ராஜினாமா செய்த நிலையில் ஜாம்பவான் இன்சமாம்-உல்-ஹக் தம்முடைய தேர்வுக்குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதைத் தொடர்ந்து புதிய டெஸ்ட் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள ஷான் மசூட் தலைமையில் ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள பாகிஸ்தான் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது.
அதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சென்ற பாகிஸ்தான் அணியினருக்கு விமான நிலையத்தில் ஆஸ்திரேலிய வாரியம் சார்பில் பெரியளவு வரவேற்பு கொடுக்கவில்லை. விமான நிலையத்திற்கு சென்ற பாகிஸ்தான் அணியினர் அங்கிருந்து ஹோட்டல் அறைக்கு செல்லும் போது அவர்களின் உடைமைகளை எடுத்து வைக்க ஆஸ்திரேலியா வாரியம் அல்லது பாகிஸ்தான் வாரியம் சார்பில் எந்த ஊழியர்களும் நியமிக்கப்படவில்லை.
அதன் காரணமாக பாபர் அசாம் உள்ளிட்ட பாகிஸ்தான் வீரர்கள் அனைவரும் தங்களுடைய உடைமைகளை கன்டெய்னர் லாரியிலிருந்து தாங்களே ஊழியர்களைப் போல எடுத்துச்சென்றனர்.