முன்னாள் பிரதமர் நேரு செய்த 2 வரலாற்றுத் தவறுகளால் இன்று ஜம்மு காஷ்மீர் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் கூறினார்.
ஜம்மு காஷ்மீர் இட ஒதுக்கீடு திருத்த மசோதா 2023, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா 2023 ஆகிய இரு மசோதாக்களும் நேற்று நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து இன்று இரு மசோதாக்களும் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, இரு மசோதாக்களையும் மக்களவையில் தாக்கல் செய்ததும், மசோதா மீதான விவாதங்கள் நடைபெற்றது. விவாதங்களின் இறுதியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “காஷ்மீர் பண்டிட்கள் இடம்பெயர்ந்தபோது சொந்த நாட்டில் அகதிகளாக வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஏறக்குறைய 46,631 குடும்பங்கள் தங்கள் தாயகத்திற்குள் இடம்பெயர்ந்தனர். இந்த மசோதா அவர்களின் உரிமைகள் மற்றும் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. உரிமைகளை வழங்குவதற்கும், மரியாதையுடன் உரிமைகளை வழங்குவதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது.
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு காங்கிரஸ் மிகப் பெரிய தீங்கு விளைவித்திருக்கிறது. மாறாக, பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக பிரதமர் நரேந்திர மோடி இடைவிடாத முயற்சிகள் மேற்கொண்டார். எனவே, நலிவடைந்த மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு பதிலாக, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று பெயர் மாற்றம் செய்வது முக்கியம்.
மேலும், ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத்தால் இதுவரை 45,000 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். ஆகவே, மாநிலத்தில் தீவிரவாத சூழலை ஒழிப்பதிலேயே எங்களது முழு கவனமும் இருக்கும். 2024-ல் மோடி அரசுதான் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று நம்புகிறேன். 2026-ல் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத சம்பவம் நடக்காது என்று நம்புகிறேன். இந்தியாவின் எல்லைக்குள் எந்தவொரு முடிவையும் எடுக்க இந்திய நாடாளுமன்றத்திற்கு அனைத்து உரிமையும் இருக்கிறது.
ஜம்மு காஷ்மீரில் நிலைமை இயல்பானதாக மாறினால், முழு மாநில அந்தஸ்தை வழங்க நாங்கள் தயங்க மாட்டோம் என்று நாட்டு மக்களுக்கும், முக்கியமாக காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்களுக்கும் நான் உறுதியளிக்கிறேன். முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு செய்த 2 வரலாற்றுத் தவறுகளால் ஜம்மு காஷ்மீர் மாநிலம் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. போர் நிறுத்தத்தை அறிவித்துவிட்டு, பின்னர் காஷ்மீர் பிரச்சனையை ஐக்கிய நாடுகள் சபைக்கு எடுத்துச் சென்றார். நேரு மட்டும் சரியான நடவடிக்கைகளை எடுத்திருந்தால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருக்கும். இது ஒரு வரலாற்றுத் தவறு” என்றார்.