நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிரான கருத்துகளை வெளியிட்ட 122 யூடியூப் செய்திச் சேனல்கள் முடக்கப்பட்டதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்திருக்கிறார்.
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த சூழலில், மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் எழுத்துப்பூா்வமாக பதில அளித்தார்.
அப்பதிலில், “நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு மற்றும் நட்பு நாடுகளுடனான நல்லுறவுக்கு எதிரான கருத்துகளை வெளியிடுவது சட்டப்படி குற்றமாகும். அப்படி வெளியிடும் யூடியூப் செய்திச் சேனல்களை முடக்க 2000-ம் ஆண்டைய தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 69ஏ பிரிவின் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
அந்த வகையில், கடந்த 2021 டிசம்பர் மாதம் முதல் இதுவரை 122 யூடியூப் செய்திச் சேனல்கள் முடக்கப்பட்டிருக்கின்றன. மின்னணுவியல் ஊடகங்களைப் பொறுத்தவரை, அனைத்து தனியார் செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேனல்களும் கேபிள் தொலைக்காட்சி ஒழுங்குமுறைச் சட்டம் 1995-ன் கீழ் வகுக்கப்பட்ட நிகழ்ச்சி விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். இதை மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்திருக்கிறார்.
மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அனுராக் தாக்கூர், “மேற்கண்ட சட்டத்துக்கு மாற்றான ஒலிபரப்பு சேவை ஒழுங்குமுறை சட்ட வரைவு மசோதா மீது துறைசார் நிபுணர்கள், பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரிடம் இருந்து மத்திய அரசு தரப்பில் கருத்துகள் கோரப்பட்டுள்ளன” என்றார்.