சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று நாட்டிற்கு பெருமை சேர்த்த விளையாட்டு வீரர்கள் குடியரசுத் தலைவரை சந்தித்தனர்.
குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று விளையாட்டு வீரர்களைக் கொண்ட குழுவினர் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தனர்.
‘மக்களுடன் குடியரசுத் தலைவர்’ என்ற இயக்கத்தின் கீழ் அவர்கள் குடியரசுத்தலைவர் மாளிகையில் சந்தித்துப் பேசினார்கள். விளையாட்டு வீரர்களுடன் ஆழமான தொடர்பை ஏற்படுத்துவதும், அவர்களின் மதிப்புமிக்க பங்களிப்புகளை அங்கீகரிப்பதும் இந்த சந்திப்பின் நோக்கமாகும்.
அப்போது உரையாடிய குடியரசுத்தலைவர்,
விளையாட்டு வீரர்கள் சர்வதேச அரங்கில் முன்மாதிரியான செயல்திறன்கள் மூலம் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர் என்று குறிப்பிட்டார். அவர்களின் அர்ப்பணிப்பு, ஆர்வம் மற்றும் சிறந்து விளங்குவதற்கான திறன் ஆகியவை அவர்களின் தனிப்பட்ட திறமையை வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தமாக விளையாட்டு உலகில் இந்தியாவின் பெயரை உயர்த்தியுள்ளதாகக் கூறினார்.
அண்மையில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகள், பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், அவர்களுடைய சிறப்பான பங்களிப்பு மூலம் இந்தியா முறையே 107 மற்றும் 111 பதக்கங்களை வென்றதாக அவர் தெரிவித்தார்.
இந்த குறிப்பிடத்தக்க சாதனை அவர்களின் திறமையைப் பற்றி பேசுவது மட்டுமல்லாமல், அவர்களின் திறன்மிக்க உணர்வையும் எடுத்துக்காட்டுவதாக அவர் கூறினார்.
அவர்களின் பயணம் தனிப்பட்ட வெற்றிகள் பற்றியது மட்டுமல்ல; இது அனைத்து இந்தியர்களின் கனவுகளுக்கும் சிறகுகள் முளைப்பது போன்றது என்று தெரிவித்தார்.
விளையாட்டு வீரர்கள் நமது கலாச்சாரம், மதிப்புகள் மற்றும் நூறு கோடி மக்களின் உணர்வின் தூதுவர்கள் என்று குறிப்பிட்டவர், இன்னும் சில மாதங்களில், 2024 ம் ஆண்டில் பாரிஸ் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் மீது உலகம் தனது கவனத்தை திருப்பும் என்றும், அனைத்து இந்தியர்களின் பார்வையும் நமது விளையாட்டு வீரர்கள் மீது பதிந்துவிடும் என்றும் கூறினார்.
அவர்களின் திறமை, அர்ப்பணிப்பு மற்றும் விளையாட்டுத் திறன் ஆகியவை நம் தேசத்திற்கு மகிழ்ச்சியையும் பெருமையையும் கொண்டு வரும் என்று நாம் நம்புவோம் என்று தெரிவித்தார்.