சிரியா எல்லை அருகே இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த மூத்த தலைவரின் மகன் உட்பட 4 பேர் உயிரிழந்தார்.
இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனத்தின் காஸா நகரைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். மேலும், இஸ்ரேலுக்குள் ஊடுருவி மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
மேலும், 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர். ஹமாஸ் தீவிரவாதிகளின் இத்தாக்குதலில் இஸ்ரேலில் வெளிநாட்டினர் உட்பட 1,400 பேர் கொல்லப்பட்டனர். 3,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து, இஸ்ரேல் இராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. சுமார் 2 மாதங்களுக்கும் மேலாக நடந்து வரும் போரில் காஸா நகரின் வடக்குப் பகுதியே உருக்குலைந்து கிடக்கிறது. ஹமாஸ் தீவிரவாதிகள் உட்பட 17,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள்.
அதேசமயம், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளும், ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்களும் மற்றும் சிரியாவிலுள்ள தீவிரவாத அமைப்புகளும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.
அந்த வகையில், சிரியா எல்லைக்கு அருகே இருந்து இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடைபெற்றது. இதையடுத்து, இஸ்ரேல் ஆளில்லா விமானம் மூலம் பதிலடித் தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த மூத்த தலைவரின் மகன் ஹசன் அலி டக்டோக் உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர்.
இதில் ஒருவர் சிரியாவைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்திருக்கிறது. தாக்குதலில் பலியான ஹசன் அலி டக்டோக் தெற்கு சிரியாவில் பயங்கரவாதக் குழுவின் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருப்பதாகக் கூறப்படும் அலி முசா டக்டோக்கின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.