ஜாதி, மதம், இனம் அல்லது மொழி சார்ந்த பெயர்கள் மற்றும் மூவர்ணக்கொடி போன்ற கொடிகளைக் கொண்ட அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்வது தொடர்பாக நாடாளுமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
இதுதொடர்பாக வழக்கறிஞர் அஸ்வினி குமார் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தலைமை நீதிபதி மன்மோகன் மற்றும் நீதிபதி மினி புஷ்கர்ணா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மதம் அல்லது ஜாதியின் பெயரால் தனிநபர்கள் வாக்களிக்க முடியாது, ஆனால் அனுமதிக்க முடியாத மத அர்த்தங்களைப் பயன்படுத்தி அரசியல் கட்சிகளை உருவாக்கலாம் என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
நான் இந்து தயவுசெய்து எனக்கு வாக்களியுங்கள் என கேட்க முடியாது. ஆனால் இந்து சமாஜ் கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சியை உருவாக்கலாம். அதுதான் பிரச்சினை. தேர்தல் பணபலம் மட்டுமல்ல, ஜாதி பலம் மற்றும் வகுப்புவாதமும் இல்லாமல் இருக்க வேண்டும் என்று வாதிட்டார்.
நீங்கள் இந்த கட்சிகளின் பெயர்களைப் பற்றி பேசுகிறீர்கள். நீங்கள் அரசியல் கட்சிகளின் கொள்கைகளைப் பார்க்க வேண்டும். அவை எவ்வாறு செயல்படுகின்றன என்பதை பார்க்க வேண்டும். ஆனால் பிரச்சினைகள் உள்ளன. இது நாடாளுமன்றத்தால் கவனிக்கப்பட வேண்டும். அது அவர்களின் களம். அவர்கள் சட்டங்களை உருவாக்குகிறார்கள், எனவே இதுதொடர்பாக அவர்கள் தான் முடிவு எடுக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.