டெல்லி அரசின் கலால் கொள்கை ஊழல் குற்றச்சாட்டு வழக்கில், விசாரணை நடத்துவதற்கு டிசம்பர் 21-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை புதிதாக சம்மன் அனுப்பி இருக்கிறது.
டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த அரசு கடந்த 2021-2022 காலக்கட்டத்தில் புதிய மதுபானக் கொள்கையை அறிவித்தது. அதன்படி, தனியார் மதுபான விற்பனையாளர்களுக்கு அனுமதி அளித்தது. இந்த விவகாரத்தில் ஆம் ஆத்மி அரசு லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, டெல்லி துணை நிலை ஆளுநர், இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டார். அதன்படி, சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது. மேலும், சட்ட விரோதப் பணப் பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்தது. இவ்வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
இந்த நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் நவம்பர் 2-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால், அந்த சம்மன் தெளிவற்றதாகவும், அரசியல் உள்நோக்கத்தோடு இருந்ததாகவும் கூறி அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்தார்.
இதைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை தற்போது மீண்டும் புதிதாக சம்மன் அனுப்பி இருக்கிறது. அதில், டிசம்பர் 21-ம் தேதி நடைபெறும் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராக மாட்டார் என்றும், அவர் பெயர் குறிப்பிடப்படாதக இடத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள 19-ம் தேதி செல்கிறார் என்றும் ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.