தெற்கு மத்திய ரயில்வேக்கு உட்பட்ட காசிபேட் – பாலா்ஷா இடையே தண்டவாள பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால் தென்னிந்தியாவில் இருந்து செல்லும் 24 வாராந்திர இரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், கோவை – நிஜாமுதின் கொங்கு விரைவு இரயில் டிச.31, ஜன.7 தேதிகளிலும், மறுமாா்க்கமாக ஜன.3, 10 தேதிகளிலும் முழுவதுமாக இரத்து செய்யப்படுகிறது.
திருநெல்வேலி – பிலாஸ்பூா் இடையே இயக்கப்படும் விரைவு இரயில் டிச.31, ஜன.7 தேதிகளிலும், மறுமாா்கமாக ஜன.2, 9 தேதிகளிலும் இரத்து செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் உள்ள கொச்சுவேலி, எா்ணாகுளத்தில் இருந்து பெங்களூரில் இருந்தும் உத்தரபிரதேசம், பீகாா், சத்தீஸ்கா் மாநிலங்களுக்குச் செல்லும் ஹம்சாபா், ராப்திசாகா் உள்ளிட்ட 22 விரைவு இரயில்கள் டிச.30 முதல் ஜன.13-ஆம் தேதி வரை முழுவதுமாக இரத்து செய்யப்படுகிறது.
மேலும், டெல்லியில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் கரீப் ரத் அதிவிரைவு இரயில் ஜன.1, 8 தேதிகளில் வாராங்கல், விஜயவாடா, ஓங்கோல் வழியாக வருவதற்கு பதிலாக பெத்தப்பள்ளி, நிஷாமாபாத், காச்சிக்கூடா, ரேணிகுண்டா வழியாக இயக்கப்படும்.
இதேபோல், சென்னை சென்ட்ரல் – பிலாஸ்பூா் இடையே இயக்கப்படும் வாராந்திர விரைவு இரயில் விஜயவாடா வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.