இந்தியாவில் நடைபெற்று வரும் புரோ கபடி தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் யு மும்பா அணி, பெங்கால் வாரியர்ஸ் அணியை 2 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கிடையே நடைபெறும் கபடி லீக் தொடரில் மொத்தம் 12 அணிகள் பங்குபெற்று விளையாடி வருகின்றன.
பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி கே.சி, குஜராத் ஜெயண்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பல்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோதாஸ் ஆகிய அணிகள் பங்குபெற்றுள்ளனர்.
இதில் நேற்று நடைபெற்ற 38வது போட்டியில் யு மும்பா – பெங்கால் வாரியர்ஸ் ஆகிய அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் முதல் ஐந்து நிமிடத்தில் முடிவில் யு மும்பா அணி 5 – 3 புள்ளிகளை கொண்டு முன்னிலை வகித்தது.
யு மும்பா அணி முதல் பாதியில் 18 – 15 என்ற புள்ளிகளை கொண்டு முன்னிலை பெற்றது. பெங்கால் அணியின் நட்சத்திர ரைடர் மணிந்தர் தனி ஆளாக தன் அணியைக் காப்பாற்ற போராடிக் கொண்டு இருந்தார்.
பெங்கால் அணி வீரர்கள் தடுப்பாட்டத்தில் கோட்டை விட்டதால் களத்தில் வீரர்கள் இல்லாமல், ரைடர் மணிந்தர் தடுப்பாட்டமும் ஆட வேண்டிய நிலையில் இருந்தார்.
எனினும், போராடி இரண்டாம் பாதியில் 10 நிமிடங்கள் முடிந்த போது பெங்கால் அணியை 26 – 28 என இரண்டு புள்ளிகள் முன்னிலை பெற வைத்தார்.
கடைசி 2 நிமிடங்கள் இருந்த போது யு மும்பா அணி 38 – 33 என முன்னிலை பெற்று போட்டியை மாற்றியது. அப்போது பெங்கால் அணி 4 புள்ளிகளை பெற்றதால் பரபரப்பு எழுந்தது. ஆனால், ஆட்ட நேர முடிவில் யு மும்பா அணி 39 – 37 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.