திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. கல்யாண் பானர்ஜி, மாநிலங்களவைத் தலைவர் ஜெக்தீப் தன்கரை போல இமிடேட் செய்து மிமிக்ரி செய்தது கடும் சர்ச்சையான நிலையில், தற்போது மீண்டும் தன்கரை போலவே மிமிக்ரி செய்ததோசு, 1,000 முறைகூட மிமிக்ரி செய்வேன் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின்போது, பார்வையாளர்கள் மாடத்திலிருந்த 2 பேர் மக்களவைக்குள் குதித்து கலர் புகைக் குண்டுகளை வீசினர். இந்த சம்பவத்தை கண்டித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால், இரு அவைகளில் இருந்தும் 141 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. கல்யாண் பானர்ஜி, அவை நடவடிக்கையின்போது மாநிலங்களவைத் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான ஜெக்தீப் தன்கர் நடந்துகொள்வதைப் போல இமிடேட் செய்தும், மிமிக்ரி செய்தும் கேலி கிண்டல் செய்தார்.
இதை காங்கிரஸ் மூத்த தலைவரும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியின் எம்.பி.யுமான ராகுல் காந்தி தனது செல்போனில் வீடியோ எடுத்தார். இந்த சம்பவம் கடும் சர்ச்சையான நிலையில், மாநிலங்களவையில் பேசிய ஜெக்தீப் தன்கர் கடும் கண்டனத்தை பதிவு செய்தார். மேலும், ஆளும் பா.ஜ.க. மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர்.
இதையடுத்து, குடியரசுத் துணைத் தலைவரை அவமானப்படுத்தும் நோக்கில் தான் அவ்வாறு செய்யவில்லை என்றும், இது ஒரு கலை என்றும் கல்யாண் பானர்ஜி தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் சற்றே அடங்கி இருந்த நிலையில், திரிணாமுல் எம்.பி. கல்யாண் பானர்ஜி, மீண்டும் ஜெக்தீப் தன்கரை போல மிமிக்ரி செய்திருக்கிறார்.
மேலும், “நான் மிமிக்ரி செய்து கொண்டேதான் இருப்பேன். இது ஒரு கலை. தேவைப்பட்டால் 1,000 முறைகூட செய்வேன். எனது கருத்தை தெரிவிக்க எனக்கு அனைத்து அடிப்படை உரிமைகளும் உள்ளன. நீங்கள் என்னை சிறையில் அடைத்தாலும் நான் பின்வாங்க மாட்டேன்” என்றும் கூறியிருக்கிறார். இதனால், இந்த விவகாரம் மீண்டும் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.
இந்த நிலையில், இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா, “கல்யாண் பானர்ஜி குடியரசுத் துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கரை போல ‘மிமிக்ரி’ செய்தது அவரது உரிமை என்று கூறுகிறார். அதோடு, தனது தாயிடம் சிறு குழந்தை போல் ஜெக்தீப் தன்கர் குறை கூறக்கூடாது என்றும் கூறுகிறார். இண்டி கூட்டணியினரும், ராகுல் காந்தியும் கல்யாண் பானர்ஜியை தைரியப்படுத்துகிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.