இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, நாளை (1-ம் தேதி) காலை 9.10 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்டை விண்ணில் செலுத்தவிருக்கும் நிலையில், அதற்கான 25 மணி நேர கவுண்டவுன் இன்று காலை 8.10 மணிக்குத் தொடங்கியது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, “எக்ஸ்போசாட்” என்ற செயற்கைக்கோளை நாளை காலை 9.10 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்துகிறது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து செலுத்தப்படும் இந்த ராக்கெட்டில், திருவனந்தபுரம் லால் பகதூர் சாஸ்திரி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மாணவிகள் தயாரித்த “வெசாட்” என்ற செயற்கைக்கோளும் விண்ணில் செலுத்தப்படுகிறது.
இவை தவிர, இந்த ராக்கெட்டில் வெளிநாடுகளைச் சேர்ந்த மேலும் 10 பேலோடுகள் விண்ணில் செலுத்தப்படவிருக்கின்றன. இந்த சூழலில், இதற்கான 25 மணி நேர கவுண்டவுன் இன்று காலை 8.10 மணிக்கு தொடங்கி இருக்கிறது.
தொடர்ந்து, நாளை காலை 9.10 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் விண்ணில் பாய்கிறது. இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதைக் காண மாணவர்கள், பொதுமக்கள் என 10,000 பேர் தங்களின் பெயர்களை முன்பதிவு செய்திருக்கிறார்கள்.
இந்த செயற்கைக்கோள் விண்வெளியில் 650 கிலோ மீட்டர் தொலைவில் புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இச்செயற்கைக்கோள் விண்வெளியில் உள்ள நிறமாலை, தூசு, கருந்துளை வாயுக்களின் மேகக்கூட்டமான “நெபுலா” உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யும்.
அதேபோல, திருவனந்தபுரம் லால் பகதூர் சாஸ்திரி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மாணவிகள் தயாரித்த “வெசாட்” என்ற செயற்கைக்கோள், காலநிலை மாற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளும்.