மழை,வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் காப்பீடு கோரிக்கை தொடர்பான முகாம் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த 17, 18-ம் தேதிகளில் பெய்த அதி கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனையடுத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்தார்.
குறிஞ்சிநகர், கோரம்பள்ளம் குளம்,அந்தோணியார்புரம் பாலம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டார். பின்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிய அவர்,மத்திய அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்யப்படும் என அறிவித்தார்.
அதன் ஒரு பகுதியாக பாதிக்கப்பட்டோர் காப்பீட்டு கோரிக்கையை சமர்பிக்கவும், அவைகளை பெற்று தகுந்த நடவடிக்கை எடுப்பதற்கான யுனைடைடு இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி டிசம்பர் 29ஆம் தேதி தூத்துக்குடி,தென்காசியிலும்,30ஆம் தேதி நெல்லை, நாகர்கோவிலில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. ஜனவரி ஒன்றாம் தேதி தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூரிலும், 2ஆம் தேதி ஸ்ரீவைகுண்டம், குமரியிலும் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.