மகாராஷ்டிராவில் கையுறை தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி, உறங்கிக் கொண்டிருந்த 6 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சாம்பாஜி நகர் பகுதியில் கையுறை தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் நேற்று இரவு பணியை முடித்துவிட்டு ஊழியர்கள் சிலர் தொழிற்சாலையிலேயே படுத்து உறங்கி கொண்டிருந்தனர்.
இந்நிலையில், கையுறை தயாரிப்பு தொழிற்சாலையில் இன்று அதிகாலை 2.15 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பற்றி தொழிற்சாலை முழுவதும் வேகமாக பரவியது. இதுகுறித்து அப்பகுதியில் இருந்தவர்கள் போலீசாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் சிக்கி தொழிற்சாலையில் உறங்கிக் கொண்டிருந்த 6 தொழிலாளர்கள் வெளியே வரமுடியாமல் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். சில தொழிலாளர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.