மதுபானக் கொள்கை மோசடி புகார் தொடர்பாக, அமலாக்கத்துறை 3 முறை அனுப்பிய சம்மனுக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் ஆஜராகாமல் புறக்கணித்திருக்கிறார். இதை பா.ஜ.க. கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறது.
டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், கடந்த 2011-ம் ஆண்டு ஆம் ஆத்மி அரசு புதிய மதுபானக் கொள்கையை அறிவித்தது.
ஆனால், இதில் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கியதில் லஞ்சம் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக டெல்லி துணை முதல்வரும், கலால் துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில், மதுபானக் கொள்கை மோசடி தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. கெஜ்ரிவால் ஆஜராகாத நிலையில் மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது.
அதற்கும் கெஜ்ரிவால் ஆஜராகாததால், 3-வது முறையாக மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனாலும், 3-வது முறை சம்மனுக்கும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.
இதையடுத்து, அமலாக்கத்துறை சம்மனுக்கு கெஜ்ரிவால் ஆஜராகாதது ஏன் என்று பா.ஜ.க. கேள்வி எழுப்பி இருக்கிறது. இதுகுறித்து பா.ஜ.க. தேசிய செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூணவல்லா கூறுகையில், “மேலும் ஒருமுறை அமலாக்கத் துறையின் 3-வது சம்மனை அரவிந்த் கெஜ்ரிவால் புறக்கணித்திருக்கிறார்.
இது அங்கே ஏதோ மறைக்கப்படுகிறது என்பதைத்தான் காட்டுகிறது. இல்லையெனில் குற்றவாளி போன்று அவர் ஏன் மறைய வேண்டும். நீதிமன்றங்கள் மணிஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங் ஆகியோருக்கு ஜாமின் வழங்கவில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.