அசாம் மாநிலம் கோலாகட் அருகே இன்று காலை சுற்றுலாப் பேருந்தும், லாரியும் மோதிக்கொண்ட விபத்தில், 12 பேர் உயிரிழந்தனர். மேலும், 25 பேர் காயமடைந்தனர்.
அசாம் மாநிலம் கோலாகட் அருகே உள்ள கமர்பந்தா பகுதியிலிருந்து திலிங்கா மந்திர் நோக்கி சுற்றுலா பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, பலிஜான் பகுதியில் இருந்து வந்த லாரி ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சுற்றுலா பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
அப்பகுதியில் இருந்த மக்கள் உடனடியாக சென்று, பேருந்தில் இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இந்த விபத்தில், 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 25 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சமும், காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.