இஸ்ரோவின் ஆதித்யா எல்-1 திட்டத்தின் இயக்குநராக தமிழகத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளியில் படித்த பெண் விஞ்ஞானி நிகர் சாஜி, இஸ்ரோவில் பாலின பாகுபாடு இல்லை என்று கூறியுள்ளார்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து செப்டம்பர் 2 ஆம் தேதி சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 விண்கலம் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தால் பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.
பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன் எனும் எல்-1 புள்ளியில், பூமிக்கும், சூரியனுக்கும் இடையேயான ஈர்ப்பு விசை சமமாக இருக்கும்.
அந்தப் புள்ளியில் ஆதித்யா எல் 1 விண்கலம் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இஸ்ரோவின் ஆதித்யா எல்-1 திட்டத்தின் இயக்குநராக தமிழகத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளியில் படித்த பெண் விஞ்ஞானி நிகர் சாஜி, இஸ்ரோவில் பாலின பாகுபாடு இல்லை என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து இவர், ” பெண்கள் இஸ்ரோவில் பணிபுரிவதற்கு எந்தவொரு தடையும் கிடையாது. இஸ்ரோவில் பணிபுரிய திறமை மட்டும்தான் முக்கியமே தவிர, அவர்கள் எந்த பாலினத்தைச் சேர்ந்தவர்கள் என்பதெல்லாம் முக்கியமில்லை. திறமைக்கு மட்டுமே முக்கியம் கொடுக்கப்படும்.
ஆதித்யா ஒரு சிக்கலான அறிவியல் செயற்கைக்கோள். ஒன்பது வருடங்களாக அயராது உழைத்திருக்கிறோம். இத்தகைய பலதரப்பட்ட பணி கலாச்சாரங்களைக் கொண்ட இந்திய அறிவியல் நிறுவனங்களுடன் பணிபுரிவது ஒரு மிகப்பெரிய சவாலாக இருந்தது ” என்று கூறியுள்ளார்.
தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை கிராமத்தில் பிறந்து வளர்ந்த நிகர், நோபல் பரிசு பெற்ற மேரி கியூரியைப் பற்றி அறிந்து, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை செய்ய ஆர்வம் கொண்டதாகச் சொல்கிறார்.