பிரதமர் மோடியை விமர்சித்து மாலத்தீவு அமைச்சர்கள் கருத்துப் பதிவிட்டிருந்ததைத் தொடர்ந்து, மாலத்தீவுக்கு எதிராகவும், லட்சத்தீவுக்கு ஆதரவாகவும் பிரபலங்கள் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2 மற்றும் 3-ம் தேதிகளில் லட்சத்தீவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது, 1,150 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
மேலும், காலையில் கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொண்டவர், அழ்கடலில் ஸ்நோர்கெலிங் செய்து மகிழ்ந்தார். பின்னர், டெல்லிக்கு திரும்பிச் சென்ற பிரதமர் மோடி, லட்சத்தீவின் பெருமை பற்றியும், தனது பயண அனுபவம் குறித்தும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு, தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.
அப்பதிவில், லட்சத்தீவின் மகிமை பற்றி புகழ்ந்திருந்த பிரதமர் மோடி, இந்தியர்கள் அனைவரும் ஒருமுறையாவது லட்சத்தீவை பார்வையிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.
இதையடுத்து, இந்தியா மாலத்தீவை குறிவைத்திருப்பதாகவும், இந்தியர்கள் அசுத்தமானவர்கள் என்றும் கேலி, கிண்டல் செய்தும் மாலத்தீவைச் சேர்ந்த அமைச்சர்கள் 3 பேர் கருத்துகளை பதிவிட்டிருந்தனர்.
இந்த நிலையில், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் மாலத்தீவுக்கு எதிராகவும் லட்சத்தீவை புகழ்ந்தும் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “இந்தியர்கள் மீது வெறுக்கத்தக்க மற்றும் இனவெறி கருத்துகளை அனுப்பும் மாலத்தீவைச் சேர்ந்த முக்கிய பொது நபர்களின் கருத்துக்களைக் கண்டேன்.
அதிகபட்ச சுற்றுலாப் பயணிகளை அனுப்பும் நாட்டுக்கு இப்படிச் செய்வது ஆச்சரியமாக இருக்கிறது. நாம் அவர்களிடம் நல்லவர்களாக இருக்கிறோம். அதேசமயம், இப்படியான வெறுப்பை நாம் ஏன் பொறுத்துக்கொள்ள வேண்டும்?
நான் மாலத்தீவுக்கு பலமுறை சென்றிருக்கிறேன். அதன் அழகை வியந்து பாராட்டி இருக்கிறேன். ஆனால், கண்ணியம் மிகவும் முக்கியமானது. இந்திய தீவுகளை ஆராய்ந்து நமது சொந்த சுற்றுலாவை ஆதரிப்போம்” என்று தெரிவித்திருக்கிறார்.
நடிகர் சல்மான் கான் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “லட்சத்தீவின் அழகான சுத்தமான மற்றும் பிரமிக்க வைக்கும் கடற்கரைகளில் நமது பிரதமர் நரேந்திர மோடியைப் பார்ப்பது மிகவும் அருமையாக இருக்கிறது. இதன் சிறப்பான அம்சம் என்னவென்றால், அது இந்தியாவில் உள்ளது” என்று பதிவிட்டிருக்கிறார்.
நடிகை ஷ்ரத்தா கபூர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “பழமையான அழகிய கடற்கரையையும், உள்ளூர் கலாசாரத்தையும் உள்ளடக்கிய லட்சத்தீவில் எனது விடுமுறை நாட்களை செலவழிக்க ஆவலாக உள்ளேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.
நடிகர் ஜான் ஆபிரகாம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “அற்புதமான இந்திய விருந்தோம்பல், பரந்த கடல்சார் பகுதியான லட்சத்தீவு நாம் ரசிக்க வேண்டிய இடம்” என்று பதிவிட்டிருக்கிறார்.
அதேபோல, இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “சிந்துதுர்க் பகுதியில் எனது 50-வது பிறந்தநாளை கொண்டாடி 250 நாட்களுக்கும் மேலாகி விட்டது. நாம் கேட்பதை விட அதிகமாக கொடுக்கக் கூடியது இந்த கடல் நகரம்.
அற்புதமான விருந்தோம்பலுடன் இணைந்த அழகிய இடங்கள் நினைவுகளின் பொக்கிஷத்தை நமக்கு கொடுத்துச் செல்லும். இந்தியா அழகான கடற்கரைகள் மற்றும் அழகிய தீவுகளால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது” என்று பதிவிட்டிருக்கிறார்.