புதுதில்லியில் நேற்று (09.01.2024) தேசிய மாணவர் படையின் குடியரசு தின முகாம் 2024-ஐப் இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே பார்வையிட்டார். அவரை தேசிய மாணவர் படையின் தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் குர்பிர்பால் சிங் வரவேற்றார்.
தேசிய மாணவர் படையின் (என்.சி.சி) ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய மூன்று பிரிவுகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் அணிவகுப்பை இராணுவத் தளபதி பார்வையிட்டார்.
அதைத் தொடர்ந்து சிந்தியா பள்ளியின் என்.சி.சி. மாணவர்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், அந்தந்த மாநில கருப்பொருள்கள் குறித்து ராணுவத் தளபதிக்கு விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது.
தேசிய மாணவர் படையினரால் நிகழ்த்தப்பட்ட கண்கவர் ‘கலாச்சார நிகழ்ச்சியை’ ராணுவத் தளபதி மற்றும் பிற சிறப்பு விருந்தினர்கள் பார்வையிட்டனர்.
முன்னாள் தேசிய மாணவர் படையினர், தற்போது ஆயுதப்படைகளில் உயர் பதவிகளை வகிப்பது குறித்து இராணுவத் தளபதி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஆயுதப் படைகளைத் தாண்டி பல்வேறு துறைகளிலும் தேசிய மாணவர் படையினர் தலைமைப் பொறுப்புகளை வகிக்கும் வகையில் திறன் படைத்தவர்கள் என்று கூறினார்.
தேசிய மாணவர் படை மாணவர்கள் தாங்கள் மேற்கொள்ளும் அனைத்து செயல்பாடுகளிலும் தேசத்திற்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். ரத்ததான முகாம்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூக சேவை நடவடிக்கைகள் போன்றவற்றில் தேசிய மாணவர் படையினரின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுக்கு ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே பாராட்டு தெரிவித்தார்.