டி20 உலககோப்பைக்கு முழுமையாக தயாராக எங்களுக்கு நேரம் இல்லை என இந்திய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இதில் மொத்தமாக 20 அணிகள் பங்கேற்கவுள்ளன. இந்த தொடருக்கான அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் இன்று ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர் தொடங்குகிறது. உலகக்கோப்பை டி20 தொடருக்கு முன்பாக இந்திய அணி விளையாடும் ஒரே டி20 தொடர் இதுவாக உள்ளது. எனவே இந்த தொடர் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்நிலையில் டி20 உலகக்கோப்பைக்கு முழுமையாக தயாராவதற்கான நேரம் தங்களுக்கு இல்லை என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், “கடந்த டி20 உலகக்கோப்பைக்கு பின் நாங்கள் ஒருநாள் உலகக்கோப்பைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தோம். ஆனால் 2023 ஒருநாள் உலகக்கோப்பைக்கு பின் தற்போது எங்களுக்கு நிறைய டி20 போட்டிகள் இல்லை. எனவே இந்த டி20 உலகக்கோப்பை சற்று வித்தியாசமாக இருக்கப் போகிறது. அதாவது இதற்கு தயாராவதற்கு போதுமான நேரம் எங்களிடம் இல்லை.
அதற்காக ஐபிஎல் தொடரை மட்டுமே சார்ந்திருக்க வேண்டியுள்ளது. எனவே நாங்கள் ஒன்றாக விளையாடுவதற்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கப்போவதில்லை. அதனால் வீரர்கள் சூழ்நிலைக்கேற்ப வளைந்து கொடுத்து தங்களை உட்படுத்திக்கொள்ள வேண்டும். கடந்த ஒருநாள் உலகக்கோப்பைக்கு தயாராக எங்களுக்கு நிறைய நேரம் இருந்தது.
சொல்லப்போனால் கடந்த டி20 உலகக்கோப்பைக்கு முன்பாகவும் எங்களுக்கு நிறைய போட்டிகள் இருந்தது. இருப்பினும் இம்முறை எங்களுக்கு அதிக போட்டிகள் கிடைக்கவில்லை. பும்ரா, சிராஜ் ஆகியோர் அடுத்ததாக நடைபெறும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரை கருத்தில் கொண்டு இத்தொடரில் விளையாடவில்லை” என்று கூறினார்.