நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31-ம் தேதி தொடங்குகிறது. பிப்ரவரி 1-ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் உள்ளிட்ட அலுவல்கள் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது.
நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரை, ஆண்டுதோறும் 3 முறை கூடுகிறது. இதில், பட்ஜெட் கூட்டத்தொடர் ஆண்டின் தொடக்கத்தில் நடக்கும். தொடர்ந்து, மழைக்காலக் கூட்டத் தொடர் மற்றும் குளிர்காலக் கூட்டத்தொடர் ஆகியவை நடைபெறும்.
அந்த வகையில், இந்த ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31-ம் தேதி தொடங்குகிறது. இக்கூட்டத் தொடர், பிப்ரவரி 9-ம் தேதி வரை நடக்கிறது. இது ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் முதல் நாள் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுகிறார்.
தொடர்ந்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்கிறார். மறுநாளான பிப்ரவரி 1-ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதால் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படாது.
பின்னர், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் உள்ளிட்ட அலுவல்கள் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. அதேசமயம், நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் நெருங்குவதால் பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம்பெறலாம் என்று கருதப்படுகிறது.