டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜரிவாலுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு 4வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி ஆம் ஆத்மி அரசு, கடந்த 2021-ம் ஆண்டு புதிய மதுபானக் கொள்கையை அறிவித்தது. ஆனால், இது தொடர்பாக தனியாருக்கு ஒப்பந்தம் வழங்கியதில் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, டெல்லி துணை முதல்வரும் கலால் துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்தது. மேலும், இவ்விவகாரத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் தொடர்பு இருப்பதாகக் கருதிய அமலாக்கத் துறை, விசாரணைக்கு ஆஜராகுமாறு நவம்பர் 2, டிசம்பர் 21 மற்றும் கடந்த 3ஆம் தேதி சம்மன் அனுப்பப்பட்டது.
மாநிலங்களவை தேர்தல், குடியரசு தின விழா ஏற்பாடுகள் ஆகிய காரணங்களை காட்டி அவர் ஆஜராகவில்லை. இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 4-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. வரும் 18 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மனில் கூறப்பட்டுள்ளது.