பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தீவிரவாதி ஹர்விந்தர் சிங் ரிண்டா, அமெரிக்காவைச் சேர்ந்த தீவிரவாதி ஹர்பிரீத் சிங் ஆகியோரின் முக்கியக் கூட்டாளியான கைலாஷ் கிச்சான் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் கைலாஷ் கிச்சான். இவர், பாபர் கால்சா எனப்படும் காலிஸ்தான் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர். பஞ்சாப் மாநிலத்தில் சதிச் செயல்களை அரங்கேற்றுவதற்காக, காலிஸ்தான் அமைப்பினருக்கு ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை சப்ளை செய்து வந்தார்.
இவருக்கு எதிராக பஞ்சாப் போலீஸார் சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் (உபா) கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வழக்குப் பதிவு செய்தனர். அதேபோல, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் போதைப் பொருட்கள் மற்றும் மயக்க மருந்துகள் சட்டம், ஆயுதங்கள் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
மேலும், கைலாஷ் கிச்சானுக்கு பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தீவிரவாதி ஹர்விந்தர் சிங் ரிண்டா, அமெரிக்காவைச் சேர்ந்த தீவிரவாதி ஹேப்பி பாசியா என்கிற ஹர்பிரீத் சிங் ஆகியோரின் முக்கியக் கூட்டாளியாகவும் இருந்து வந்தார். எனவே, அவரை போலீஸார் தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்த நிலையில்தான், கைலாஷ் கிச்சான் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதுகுறித்து பஞ்சாப் மாநில காவல்துறை தலைவர் கௌரவ் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தீவிரவாதி ஹர்விந்தர் சிங், அமெரிக்காவைச் சேர்ந்த தீவிரவாதி ஹர்ப்ரீதி சிங் ஆகியோரின் முக்கியக் கூட்டாளியான கைலாஷ் கிச்சான் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
மத்திய அரசு அமைப்புகளின் உதவியுடன் பஞ்சாப் மாநில காவல்துறையின் சிறப்புப் படை ராஜஸ்தான் மாநிலம் பலோடியில் கைது செய்திருக்கிறது. அப்போது, அவரிடமிருந்து சீனாவில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி, 8 தோட்டாக்கள் ஆகியவற்றையும் சிறப்புப் படையினர் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.
அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பஞ்சாப் மாநிலத்தில் தீவிரவாத செயல்களை அரங்கேற்றுவதற்காக பாபர் கால்சா தீவிரவாத அமைப்புக்கு கைலாஷ் கிச்சான் ஆயுதங்களை சப்ளை செய்து வந்தது தெரியவந்தருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.