கேலோ இந்தியா திட்டத்தின் கீழ், அடுத்த 2 மாதங்களில் நாடு முழுவதும் 1,000 கேலோ இந்தியா மையங்கள் அமைக்கப்படும் என்று மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்திருக்கிறார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள யஷ்வந்த் ஸ்டேடியத்தில், “கஸ்தர் கிரிடா மஹோத்சவ்” என்கிற விளையாட்டு விழாவின் 6-வது நிகழ்ச்சியை மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், “மத்திய அரசு விளையாட்டு பட்ஜெட்டை 800 கோடியில் இருந்து 3,200 கோடி ரூபாயாக உயர்த்தி இருக்கிறது. நாட்டிலுள்ள விளையாட்டு வீரர்களின் செயல்திறன் குறிப்பிடத்தக்க வகையில் இருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விளையாட்டில் பெரிய அளவில் சாதனைகள் நிகழவில்லை. ஆனால், தற்போது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறது. ஆகவே, கேலோ இந்தியா திட்டத்தின் கீழ், அடுத்த 2 மாதங்களில் நாடு முழுவதும் 1,000 கேலோ இந்தியா மையங்கள் அமைக்கப்படும்.
மகாராஷ்டிராவின் பாரம்பரிய விளையாட்டான மல்லகம்பா மற்றும் நாட்டின் பிற பாரம்பரிய விளையாட்டுகள் தேசிய மற்றும் கேலோ இந்தியா விளையாட்டுகளின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டிருக்கின்றன. இந்த பாரம்பரிய விளையாட்டுகளை சர்வதேச அளவில் கொண்டு சென்று ஒலிம்பிக் போட்டிகளிலும் இடம்பெறச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசுகையில், “கடந்த 5 ஆண்டுகளாக இந்த விளையாட்டு விழாவில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த 17 நாள் விளையாட்டுக் கொண்டாட்டம் நாக்பூர் நகரில் உள்ள 66 மைதானங்களில் 60 விளையாட்டுகளை உள்ளடக்கும். இந்த விளையாட்டு விழாவில், 1.35 கோடி ரூபாய்க்கும் அதிகமான பரிசுகளும் வழங்கப்படும்.
இந்த விளையாட்டு நிகழ்வில் கலந்து கொள்ளும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் தலா 2 லட்சம் ரூபாய் வீதம் ஒரு வருடத்திற்கு காப்புறுதித் தொகையும் வழங்கப்படும்” என்றார்.