அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக நாடு முழுவதிலிருந்தும் அயோத்திக்கு 200 ஆஸ்தா சிறப்பு ரயில்களை இயக்க இந்திய ரயில்வே நிர்வாகம் தயாராகி வருகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராம் ஜென்மபூமி அறக்கட்டளை செய்து வருகிறது.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், மற்றும் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் கலந்துகொள்கின்றனர்.
இதையொட்டி பக்தர்கள் வசதிக்காக நாடு முழுவதிலிருந்தும் அயோத்திக்கு 200 ஆஸ்தா சிறப்பு ரயில்களை இயக்க இந்திய ரயில்வே நிர்வாகம் தயாராகி வருகிறது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்து குறிப்பிட்ட நகரங்களிலிருந்து புறப்படும் இந்த ரயில் சில குறிப்பிட்ட ரயில்நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும். ராமர் ஆலய திறப்பு விழாவுக்குப் பின்னர் 100 நாட்கள் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
ஐ.ஆர்.சி.டி.சி. மூலமே இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவைச் செய்ய முடியும். மேலும் இந்த ரயில்களில் சைவ உணவு மட்டுமே வழங்கப்படும். டிக்கெட் முன்பதிவு, அதிவேக ரயில் கட்டணம், கேட்டரிங் கட்டணம், சேவை கட்டணம் மற்றும் ஜி.எஸ்.டி. ஆகியவையும் வசூலிக்கப்படும்.
தமிழகத்தில் இந்த சிறப்பு ரயில் சென்னை, கோவை, மதுரை மற்றும் சேலம் ஆகிய ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்பட உள்ளது. இதேபோல பல்வேறு மாநிலங்களிலிருந்து அயோத்திக்குச் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.