லோக்சபாவில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, அரசு பங்களாவை காலி செய்யும்படி அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, மஹுவா மொய்த்ரா அரசு பங்களாவை காலி செய்தார்.
மேற்குவங்க மாநிலத்தின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் மஹுவா மொய்த்ரா. கிருஷ்ணா நகர் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யாக இருந்தார். இவர், அதானி குழுமத்தையும், பிரதமர் மோடியையும் தொடர்புபடுத்தி மக்களவையில் கேள்வி எழுப்புவதற்காக, மற்றொரு தொழிலதிபரிடமிருந்து லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது.
இது குறித்து பா.ஜ.க. எம்.பி. நிஷாந்த் துபே நாடாளுமன்றத்தில் புகார் செய்தார். இதையடுத்து, இந்த புகார் குறித்து நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரித்தது. அப்போது, லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டதால், அவரை தகுதி நீக்கம் செய்யும்படி ஒழுங்கு நடவடிக்கைக் குழு பரிந்துரை செய்தது. ஆகவே, மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இதையடுத்து, புதுடெல்லியில் உள்ள அரசு பங்களாவை காலி செய்யும்படி, மஹுவா மொய்த்ராவுக்கு மக்களவை செயலகம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நோட்டீஸ் அனுப்பியது. மேலும், அரசு எஸ்டேட் இயக்குநரகமும் கடந்த 7 மற்றும் 12-ம் தேதிகளில் 2 நோட்டீஸ்கள் அனுப்பியது. ஆனாலும், மஹுவா மொய்த்ரா அரசு பங்களாவை காலிசெய்யவில்லை.
எனவே, வீட்டைக் காலி செய்யாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடந்த வாரம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அப்போதும் வீட்டைக் காலி செய்ய மறுத்த மஹுவா மொய்த்ரா, நோட்டீஸை ரத்து செய்யக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அரசு வீட்டை காலி செய்ய அவகாசம் கோரினார்.
ஆனால், அந்த மனுவை விசாரித்த நீதிபதி சுப்ரமணியன் பிரசாத், மஹுவா மொய்த்ரா கோரிக்கையை ஏற்க மறுத்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, வீட்டைக் காலி செய்ய வைக்க குழு ஒன்று அவரது வீட்டிற்குச் அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையே, டெல்லியில் உள்ள அரசு பங்களாவை மஹுவா மொய்த்ரா காலி செய்தார்.