அயோத்தி இராமர் கோவில் பிரசாதம் என்ற தவறான பெயரில் இனிப்புகளை விற்பனை செய்ததாக, அமேசான் நிறுவனத்துக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக 1,800 கோடி ரூபாயில் ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம், இராம் லல்லா சிலை பிரான் பிரதிஷ்டை விழா ஆகியவை வரும் 22-ம் தேதி நடைபெறுகிறது. இவ்விழாவில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பிரான் பிரதிஷ்டை செய்கிறார்.
மேலும், ஏராளமான வி.வி.ஐ.பி.க்களும் விழாவில் கலந்துகொள்கிறார்கள். ஆகவே, கோவிலில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். எனவே, இவ்விழாவுக்கு பக்தர்கள் வரவேண்டாம் என்றும், விழா முடிந்த பிறகு கோவிலுக்கு வந்து இராம் லல்லாவை தரிசிக்கும்படியும் கோவில் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
அதோடு, அயோத்தி இராமர் கோவில் பிரான் பிரதிஷ்டையின்போது பயன்படுத்தப்படும் இனிப்பு வகைகள், ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு வழங்க கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருக்கிறது. இதற்கான ஆன்லைன் முகவரி, பணம் செலுத்த வேண்டிய விவரம் ஆகியவையும் வெளியிடப்பட்டிருக்கின்றன.
இந்த நிலையில், ஆன்லைன் வர்த்தகத்தில் பிரபலமான அமேசான் நிறுவனம், ‘ஸ்ரீராம் மந்திர் அயோத்தி பிரசாத்’ என்கிற பெயரில் இனிப்புகளை விற்பனை செய்ததாக அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு சார்பில் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தில் புகார் செய்யப்பட்டது.
அப்புகாரில், ‘ஸ்ரீராம் மந்திர் அயோத்தி பிரசாத்’ என்ற போர்வையில் அமேசான் நிறுவனம் இனிப்புகளை விற்பனை செய்வதில் ஏமாற்றும் வர்த்தகத்தில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி இருந்தது. இதனடிப்படையில், அமேசான் நிறுவனத்துக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
அந்த நோட்டீஸில், “நோட்டீஸ் அனுப்பிய 7 நாட்களுக்குள் அமேசான் நிறுவனம் பதிலளிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019-ன் விதிகளின் கீழ் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதாவது, உணவுப் பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்வதால், தவறான தகவல்களைப் பரப்புவது, பொருட்களின் உண்மையான பண்புகள் குறித்து நுகர்வோரை தவறாக வழிநடத்துவதாக நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
மேலும், தயாரிப்புகளின் துல்லியமான பண்புக்கூறுகள் குறிப்பிடப்பட்டிருந்தால், அத்தகைய நடைமுறைகள் நுகர்வோர் வாங்கும் முடிவுகளை எடுக்கத் தவறாகப் பாதிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.