தமிழகத்திலிருந்து அயோத்திக்கு சிறப்பு இரயில்கள் இயக்க இரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி இராமஜென்ம பூமியில், மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள இராமர் கோவிலில், வருகிற 22-ஆம் தேதி பிராண பிரதிஷ்டை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை செய்து வருகிறது. இந்த விழாவில், நாடு முழுவதிலுமிருந்து 7 ஆயிரம் பேர் கலந்துகொள்ள உள்ளனர்.
அயோத்தி இராமர் கோவில் திறக்கப்பட்ட பிறகு, நாடு முழுவதிலும் இருந்து இலட்சக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக, அயோத்தியில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதி அயோத்தியில் அதிநவீன வசதிகளுடன் சர்வதேச தரத்திலான விமான நிலையம் அமைக்கப்பட்டு, விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், பல கோடி ரூபாய் செலவில் இரயில்வே நிலையம் மேம்படுத்தப்பட்டுள்ளன. அயோத்திக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து விமான சேவையும், இரயில் சேவையும் தொடங்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னையில் இருந்து அயோத்திக்கு நேரடி விமான சேவை தொடங்கப்பட உள்ளது. இதுபோல தமிழகத்திலிருந்து அயோத்திக்கு சிறப்பு இரயில்கள் இயக்க தெற்கு இரயில்வே முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து தெற்கு இரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: தற்போதுள்ள நிலவரப்படி, அயோத்தி தாம் இரயில் நிலையத்தில் ஒரு நாளைக்கு, 100 இரயில் சேவைகளை இயக்க முடியும்.
அதற்கேற்ற வகையில், திருநெல்வேலி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், மதுரை, கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய இடங்களில் இருந்து அயோத்திக்கு, 34 சிறப்பு இரயில்களை இயக்க, ஐ.ஆர்.சி.டி.சி. திட்டமிட்டுள்ளது. இந்த இரயில்களில் குறைந்த கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு இரயில்கள், வரும் 29-ஆம் தேதி முதல் பிப்ரவரி 29-ஆம் தேதி வரை இயக்கப்பட உள்ளன. இதுகுறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.