19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் பிப்ரவரி 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
நேற்றையப் போட்டியில் இந்தியா – அயர்லாந்து அணிகள் விளையாடியது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதல் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 301 ரன்கள் எடுத்தது. இதில் இந்திய அணியின் வீரர் முஷீர் கான் 9 பௌண்டரீஸ் 4 சிக்சர்கள் உட்பட 106 பந்துகளில் 118 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
உதய் சஹரன் 75 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அர்ஷின் குல்கர்னி 32 ரன்களும், ஆரவெல்லி அவனிஷ் ராவ் 22 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க சச்சின் தாஸ் 21 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 301 ரன்கள் எடுத்தது. அயர்லாந்து அணியில் அதிகபட்சமாக கிறிஸ்டோபர் 3 விக்கெட்களை வீழ்த்தினார். ஜான் 2 விக்கெட்களும், பிந் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து 302 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி 30வது ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 100 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
அயர்லாந்து அணியில் அதிகபட்சமாக டேனியல் 27 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கிறிஸ்டோபர் 15 ரன்களும், ஹண்டர் 13 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க மற்ற வீரர்கள் ஓரிலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.
இந்தியாவில் அதிகபட்சமாக நமன் திவாரி 4 விக்கெட்களையும், சௌமி குமார் பாண்டே 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். உதய், தனுஷ், அபிஷேக் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
இதனால் இந்தியா அணி 201 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் ஆட்டநாயகன் விருது 118 ரன்களை அடித்த முஷீர் கானுக்கு கொடுக்கப்பட்டது.