‘அகில் பாரதீய மங் சமாஜ்’ என்ற அமைப்பைச் சேர்ந்த ராம பக்தர்கள், ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளைக்கு வெள்ளி துடைப்பம் ஒன்றைக் காணிக்கையாக அளித்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமர் பிரதிஷ்டை விழா ஜனவரி 22ஆம் தேதி நடைபெற்றது. பாரதப் பிரதமர் மோடி பூஜைகள் செய்து குழந்தை ராமர் சிலையை பிரதிஷ்டை செய்து வைத்தார்.
கோவில் கும்பாபிஷேகம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மறுநாள் முதல் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் அயோத்தியை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கினர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் அயோத்தி ராமர் கோவிலுக்குப் பரிசுப் பொருட்களையும், நன்கொடைகளையும் வழங்கி வருகின்றனர்.
அந்தவகையில் , ‘அகில் பாரதீய மங் சமாஜ்’ என்ற அமைப்பைச் சேர்ந்த ராம பக்தர்கள், ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளைக்கு வெள்ளி துடைப்பம் ஒன்றைக் காணிக்கையாக அளித்துள்ளனர்.
இந்த வெள்ளி துடைப்பம் 1.751 கிலோ எடை கொண்டது. கோயிலில் கர்ப்பகிரகத்தைச் சுத்தம் செய்ய இதனை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் வழங்கியுள்ளனர்.
இதுகுறித்து அகில பாரதிய மங் சமாஜைச் சேர்ந்த மதுகர் ராவ் தேவ்ஹரே கூறுகையில், “நாங்கள் பெதுலில் இருந்து வந்துள்ளோம். உலகமே ஜனவரி 22ஆம் தேதியை தீபாவளியாகக் கொண்டாடியது.
தீபாவளியன்று துடைப்பத்தை லட்சுமி தேவியின் வடிவில் வணங்கப்படுவதால், அகில் பாரதிய மங் சமாஜ், வெள்ளி துடைப்பத்தைப் பரிசளித்துள்ளது.
இந்தத் துடைப்பத்தைச் செய்து முடிக்க 11 நாட்கள் ஆனது. 1.751 கிலோ எடை கொண்ட இந்தத் துடைப்பம் 108 வெள்ளிக் குச்சிகளைக் கொண்டது. இதன் மேல் பகுதியில் வெள்ளியாலான லட்சுமி தேவியின் உருவம் உள்ளது. இந்தத் துடைப்பத்தை கர்ப்பக்கிரகத்தை சுத்தம் செய்ய பயன்படுத்த வேண்டும்” எனக் கூறினார்.