19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் பிப்ரவரி 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தொடரின் லீக் சுற்று முடிவடைந்த நிலையில் சூப்பர் 6 சுற்று நடைபெற்று வருகிறது. நேற்றைய சூப்பர் 6 சுற்றில் இந்தியா – நேபாளம் அணிகள் விளையாடியது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 297 ரன்களை எடுத்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக சச்சின் தாஸ் 113 ரன்களும், கேப்டன் உதய் சாஹரன் 100 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். நேபாளம் அணியில் அதிகபட்சமாக குல்சன் ஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆகாஷ் சந்த் 1 விக்கெட்டை எடுத்தார்.
இதனைத் தொடர்ந்து 298 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது நேபாளம் அணி. நேபாளம் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 165 ரன்களை எடுத்து தோல்வியடைந்தது.
அதிகபட்சமாக தேவ் கனல் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதேபோல் நேபாளம் அணியின் பந்துவீச்சாளர் துர்கேஷ் குப்தா 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய அணியில் அதிகபட்சமாக சவுமி பாண்டே 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அர்ஷின் 2 விக்கெட்களும், ராஜ், ஷுக்லா, அபிஷேக் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனால் இந்திய அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. மேலும் இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருது 113 ரன்களை அடித்த சச்சின் தாஸுக்கு வழங்கப்பட்டது.