அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் கரூர் ராமேஸ்வரப்பட்டி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கடந்த 2023 ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர்.
பைபாஸ் இதய அறுவை சிகிச்சைக்கு பிறகு, சென்னை புழல் மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் அவர் வைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் ஏற்கெனவே நிராகரித்து தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, 2-வது முறையாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு கடந்த ஜனவரி 30 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவுக்கு அமலாக்கத் துறை தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை பிப்ரவரி 14-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
இதனையடுத்து சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட பல இடங்களில் அமலாக்கத்துறைசோதனை மேற்கொண்ட நிலையில் தற்போது கரூர் மாவட்டம் மண்மங்களத்தை அடுத்த கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராமேஸ்வரப்பட்டியில் உள்ள இல்லத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தாய் மற்றும் தந்தை வசித்து வருகின்றனர்.
இந்த வீட்டில் இன்று காலை 7.30 மணியளவில் அங்கு கேரளா பதிவு எண் கொண்ட காரில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 பேர் 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே இந்த வீட்டிற்கு பல முறை வருமான வரித்துறை அதிகாரிகள், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைகள் மேற்கொண்ட நிலையில் இன்று மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.