கடந்த 10 ஆண்டுகளில், புவி அறிவியல் மற்றும் வானியல் கண்காணிப்பு மற்றும் முன்னறிவிப்பு தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் மேம்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
இது குறித்து மத்திய புவி அறிவியல் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதாவது, 2014-ஆம் ஆண்டில் 15-ஆக இருந்த டாப்ளர் வானிலை ரேடார்கள் கட்டமைப்பு 2023-ஆம் ஆண்டில் 39-ஆகவும், 2014-ல் 675 ஆக இருந்த தானியங்கி வானிலை நிலையங்கள் 2023-ல் 1,208 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
2014-ல் 1,350 ஆக இருந்த தானியங்கி மழை அளவீட்டு அமைப்புகள் 2023-ல் 1,382 ஆகவும், 2014-ல் 19 ஆக இருந்த அதிவேக காற்று பதிவு அமைப்பு 2023-ல் 35 ஆகவும், 2014-ல் 3 ஆயிரத்து 955 ஆக இருந்த மாவட்ட வாரியான மழை கண்காணிப்பு திட்ட நிலையங்கள் 2023-ல் 5 ஆயிரத்து 896 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
வேளாண் வானிலை ஆலோசனை சேவைகள் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் மாவட்ட அளவிலிருந்து தொகுதி அளவில் நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது, நாட்டில் உள்ள அனைத்து விவசாய முக்கியத்துவம் வாய்ந்த 700 மாவட்டங்களுக்கும், சுமார் 3 ஆயிரத்து 100 வட்டாரங்களுக்கும் வேளாண் வானிலை ஆலோசனை சேவைகள் வழங்கப்படுகிறது.
நீலப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும், கடல் வளங்களை நிலையான முறையில் பயன்படுத்துவதற்கும், ஆழ்கடல் வளங்களை ஆராய்வதற்காக புவி அறிவியல் அமைச்சகம் 2021-ம் ஆண்டில் ஆழ்கடல் ஆய்வுப் பணியைத் தொடங்கியுள்ளது என்று கூறினார்.