ஆந்திரா மாநிலம் நெல்லூர் அருகே லாரி பேருந்து மீது மோதிய விபத்தில், 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னையில் இருந்து 23 பயணிகளுடன் ஹைதராபாத் நோக்கி சுற்றுலா பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து ஆந்திரா மாநிலம் நெல்லூர் அருகே சென்றது.
அப்போது, எதிர்புறமாக வந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. மேலும், சென்னையில் இருந்து ஹைதராபாத் நோக்கி சென்ற சுற்றுலா பேருந்தின் மீதும் மோதி விபத்துக்குள்ளானது.
இதுகுறித்து அப்பகுதியில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், அப்பகுதி மக்களின் உதவியுடன் பேருந்தில் இருந்தவர்களை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கோர விபத்தில், சம்பவ இடத்திலேயே 6 பேர் உடல் நசுங்கி இறந்தனர். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இருவர் இறந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.