சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள் ஆன பிறகும் பேருந்து வசதி இல்லாத கிராமங்கள் உத்திரமேரூர் தொகுதியில் உள்ளன எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு எதிரான அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதியில் நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியால், மூன்று முறை குறிப்பிடப்பட்ட பெருமைக்குரியது உத்திரமேரூர். கல்வெட்டு ஊர் என்ற சிறப்புப் பெயர் பெற்ற உத்திரமேரூரில், உள்ள பண்டைய வரலாறு சார்ந்த, பராந்தகச் சோழன் கல்வெட்டுகள், இரண்டாயிரம் ஆண்டுகால வரலாற்று செய்திகளை சொல்கின்றன.
கடந்த 2023 ஆண்டு ஜனவரி மாதம், மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் பேசிய நமது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், உத்திரமேரூர் கல்வெட்டுகளின் சிறப்பம்சம் பற்றிக் குறிப்பிட்டார்.
புதிய பாராளுமன்றத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவின் போதும் இந்தியாவின் ஜனநாயகத்தின் பெருமைகளுக்கு உதாரணமாக, ஆயிரம் ஆண்டுகள் பழமையான உத்திரமேரூர் கல்வெட்டு ஆதாரங்களைக் குறிப்பிட்டார்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தக் கல்வெட்டுகளில் அந்தக் காலத்தில் தேர்தல் நடைமுறைகள் எப்படியிருந்தன என்பது குறித்து விளக்குகின்றன என்பதை எடுத்துரைத்தார். மேலும், உத்திரமேரூர் கல்வெட்டின் நகல், பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது இந்த ஊருக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக உள்ளது.
தேர்தலில் போட்டியிடும் நபர்களுக்கு நிபந்தனைகளாக, ஒரு ஆண்டு பதவிக்காலம், குடும்பத்தினர் வாரியப் பதவியில் இருந்தால், அடுத்த மூன்று ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட இயலாது என்பன போன்ற கடுமையான தகுதிகளைக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. 35 வகையான குற்றங்களைச் செய்தவர்கள், தேர்தலில் போட்டியிட தகுதியில்லாதவர்கள் என்றும் குறிப்பிடுகிறது.
உத்திரமேரூர் கல்வெட்டுக்களின்படி பார்த்தால், திமுகவைச் சேர்ந்த ஒருவர் கூட தேர்தலில் போட்டியிட முடியாது. சதுர்வேதிமங்கலம் என்றழைக்கப்படும் உத்திரமேரூர், மிகப்பெரிய பாரம்பரிய சுற்றுலா தலமாக உருவாக அனைத்துத் தகுதிகளும் உள்ள பகுதி. பாலாறு, செய்யாறு மற்றும் வேகவதி என மூன்று ஆறுகளின் கரையில் அமைந்திருக்கிறது உத்திரமேரூர்.
உத்திரமேரூர் பேரூராட்சியில் 73 கிராம ஊராட்சிகள் உள்ளன. தமிழகத்திலேயே அதிக கிராம ஊராட்சிகளை கொண்டு இருக்கும் பேரூராட்சி இதுதான். நிர்வாகத்திற்கு சிரமமாக உள்ளதால், பேரூராட்சியைப் பிரித்து, சாலவாக்கத்தை தலைமை இடமாக வைத்து ஒரு தனி ஒன்றியம் வேண்டும் என்ற இப்பகுதி மக்களின் கோரிக்கையை பாஜக முன்னெடுத்துச் செல்லும்.
சுமார் 4,000 ஏக்கர் பரப்புள்ள உத்திரமேரூர் ஏரி, சுமார் 5,436 ஏக்கர் விவசாய நிலங்களுக்குப் பாசன வசதி வழங்குகிறது. பல்லவ காலத்தில் கட்டப்பட்ட இந்த ஏரி, தற்போது ஆக்கிரமிப்புகளால் சுருங்கிப் போய்விட்டது. இந்த ஏரி மற்றும் கால்வாயை தூர்வாரினால் பல ஏக்கர்கள் விவசாய பாசன வசதி பெரும்.
ஆனால், திமுக அரசுக்கு விவசாயம் குறித்த கவலை இல்லை. வரலாற்றுச் சிறப்புமிக்க உத்திரமேரூரில் அடிப்படை மருத்துவ வசதிக்கு, ஆரம்ப சுகாதார நிலையம் இல்லை. சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள் ஆன பிறகும் பேருந்து வசதி இல்லாத கிராமங்கள் உத்திரமேரூர் தொகுதியில் உள்ளன. சரியான சாலை வசதிகள் இல்லை. கடந்த 2022ஆம் ஆண்டு, உத்திரமேரூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்தது. தமிழகத்தில் 10,000 சிதிலமடைந்த பள்ளி கட்டிடங்கள் உள்ளன.
அவற்றைச் சரி செய்ய திமுக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உத்திரமேரூர் காவல் நிலையம் 25 ஆண்டுகளாகவும், இங்குள்ள நீதிமன்றம் 20 ஆண்டுகளாகவும் வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வருவது வெட்கக்கேடு. உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினரும், சென்னையிலிருந்து வரும் திமுகவினரும், உத்திரமேரூர் விவசாய நிலங்களுக்கு மத்தியில் கல்குவாரி அமைத்துள்ளனர். இதனால், விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பெரிதும் பாதிப்பு ஏற்படுகிறது. முறைகேடான இந்த கல்குவாரிகளுக்கு எதிரான போராட்டத்தில், பொதுமக்களுடன் பாஜக இணைந்து போராடி, இந்த குவாரிகளைத் தடுக்கும்.
நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மகாபலிபுரம், லட்சத்தீவு என நம் நாட்டில் உள்ள புகழ்பெற்ற இடங்களில் சுற்றுலாத் துறையை முன்னேற்றி வருகிறார். ஆனால், முதலமைச்சர் ஸ்டாலின், முதலீடு என்ற பெயரில் சிங்கப்பூர், ஜப்பான், துபாய், ஸ்பெயின் என வெளி நாடுகளுக்கு சுற்றுலா செல்கிறார். ஒரு ரூபாய் கூட தமிழகத்துக்கு முதலீடு கொண்டு வரவில்லை.
நீட் தேர்வு மூலம், சாதாரண, ஏழை எளிய குடும்பத்தில் இருந்து வரும் மாணவர்களுக்கு, மருத்துவக் கல்வி பெற வாய்ப்புகள் உருவாகியிருக்கின்றன. உத்திரமேரூர் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் இருந்து, இரண்டு கூலித் தொழிலாளர்களின் குழந்தைகள் இன்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, மருத்துவக் கல்வி பயில்கிறார்கள். திமுகவினர் நடத்தும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் வருமானத்திற்காக, திமுக நீட் தேர்வை எதிர்க்கிறது. தமிழக மக்கள் அனைவரும், உத்திரமேரூருக்கு வரவேண்டும்.
இங்குள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைக் காணவேண்டும். இங்குள்ள ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான மூன்று கோவில்களையும் தரிசிக்க வேண்டும். உத்திரமேரூர் மண்ணின் பொருளாதாரம் உயர கைகொடுக்க வேண்டும். நமது பிரதமர் அவர்கள், உத்திரமேரூர் குறித்துப் பேசிய பிறகு, டெல்லியில் இருந்தும் இன்று மக்கள் உத்திரமேரூருக்கு வரத் தொடங்கியிருக்கிறார்கள். நமது பிரதமர் மோடியின் நோக்கம் கிராமங்களை வலுப்படுத்த வேண்டும் என்பதுதான்.
உத்திரமேரூரை தமிழகத்தில் ஒரு முக்கியமான சுற்றுலா மையமாக மாற்ற, ஊழலற்ற, நேர்மையான நல்லாட்சி தொடர, வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழகம் முழுவதும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களது கரங்களை பலப்படுத்தி மூன்றாவது முறை ஆட்சி அமைத்திட இம்முறை தமிழகமும் துணை நிற்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.