19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 253 ரன்கள் எடுத்துள்ளது. 254 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 19-ஆம் தேதி தொடங்கிய நிலையில், இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது.
16 அணிகள் பங்கேற்ற இப்போட்டி தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின. இதில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.
இந்தத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதை அடுத்து ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்களாக ஹாரி டிக்சன், சாம் கான்ஸ்டாஸ் ஆகியோர் களமிறங்கினர்.
இதில், சாம் கான்ஸ்டாஸ் டக் அவுட் ஆனதை அடுத்து, களமிறங்கிய ஹக் வெய்ப்ஜென், ஹாரி டிக்சன் உடன் ஜோடி சேர்ந்து, நிதானமாக விளையாடி ரன்களை குவித்தனர். ஹாரி டிக்சன் 42 ரன்னிலும், ஹக் வெய்ப்ஜென் 48 ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனையஅடுத்து களமிறங்கிய ஹர்ஜாஸ் சிங் நிதானமாக ஆடி அரைசதம் விளாசினார்.
தொடர்ந்து, நிதானமாக விளையாடிய ஹர்ஜாஸ் சிங் 55 ரன்னிலும், அடுத்து வந்த ரியான் ஹிக்ஸ் 20 ரன்னிலும், ராப் மேக்மில்லன் 2 ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். இறுதியில், ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட் இழப்பிற்கு 253 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 254 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.