பீகார் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் நிதிஷ் குமார் வெற்றிபெற்றார்.
பீகார் மாநிலத்தில் பா.ஜ.க, ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டன. பா.ஜ.க.வுடன் கூட்டணியை முறித்துக் கொண்ட நிதிஷ்குமார், ஆர்.ஜே.டி, காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணி ஆதரவுடன் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார். துணை முதல் அமைச்சராக தேஜஸ்வி யாதவும் பதவியேற்றனர்.
அண்மையில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை தொடர்ந்து முதலமைச்சர் நிதிஷ்குமார் பதவி விலகினார். பின்னர் பாஜக ஆதரவுடன் மீண்டும் முதலமைச்சராக அவர் பதவியேற்றார்.
இந்நிலையில், நிதிஷ்குமார் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. முதலில் முன்னதாக சபாநாயகர் அவத் பீகாரி சவுத்ரி (Awadh Bihari Choudhary) மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இத்தீர்மானத்திற்கு ஆதரவாக 125 உறுப்பினர்களும், எதிர்த்து 112 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.இதனையடுத்து தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இதனால் ராஷ்டிரிய ஜனதா தளத்தை சேர்ந்த சவுத்ரி பதவி விலகினார்.
இதனைத்தொடர்ந்து நிதிஷ்குமார் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் நிதிஷ்குமாருக்கு ஆதரவு 129 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதனையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் நிதிஷ்குமார் வெற்றி பெற்றார். இதனிடையே ஆர்ஜேடி உள்ளிட்ட கட்சிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தன.