மணிப்பூர் மாநிலம் இம்பால் சர்வதேச விமான நிலையத்தில், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் கடத்தி வந்த, 19 தங்க பிஸ்கட்டுகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மணிப்பூர் மாநிலம் இம்பாலில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமான நிலையத்திற்கு வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் சிலர் தங்கள் உடமைகள் மற்றும் உடைகளில் மறைத்து வைத்து தங்கம் உட்பட பல பொருட்களைக் கடத்தி வருவதும், இதை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து, அதிரடியாக பறிமுதல் செய்வதும் வாடிக்கையாகி விட்டது.
இந்நிலையில், இம்பால் சர்வதேச விமான நிலையத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில், இம்பாலின் கடத்தல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் விமான நிலையம் சென்றனர். அங்கு ஒரு பயணி மற்றும் ஒரு கோச் டிரைவர் என இருவர் இருந்தனர்.
அவர்களிடம் இருந்து சுமார் ரூ.1.99 கோடி மதிப்பிலான 19 தங்க பிஸ்கட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக பயணி உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.