2024ஆம் ஆண்டு இறுதிக்குள் அமெரிக்காவில் உள்ளது போல் சாலைகள் இருக்கும் என மத்திய சாலைப்போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் தனக்பூரில் 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான சாலை திட்ட பணிகள் அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய சாலைப்போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்றார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், உத்தரகாண்ட் மாநிலத்தில் சாலை உள்கட்டமைப்பிற்காக மத்திய அரசு ரூ.2 லட்சம் கோடி செலவிட உள்ளது.
அதன் சாலைகள் 2024-ஆம் ஆண்டு இறுதிக்குள் அமெரிக்காவில் உள்ளதைப் போன்று இருக்கும் என்றும் தெரிவித்தார். உத்தரகாண்டில் தற்போது சாலை உள்கட்டமைப்புக்காக ரூ.1.40 கோடி செலவிடப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
2024-ம் ஆண்டு இறுதிக்குள் உத்தரகாண்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் சர்வதேச தரத்திற்கு ஏற்ற வகையில் இருக்கும் என்று முதல்வர் புஷ்கர் சிங் தாமி முன்னிலையில் அறிவிக்க விரும்புகிறேன். இந்த சாலைகள் அமெரிக்காவில் உள்ளதைப் போல இருக்கும்.
உத்தரகாண்டில் 2014ல் 2,517 கி.மீ தேசிய நெடுஞ்சாலைகள் இருந்ததாகவும், அது தற்போது 3,608 கி.மீ ஆக உயர்ந்துள்ளதாகவும் கட்காரி கூறினார்.
இதனிடையே தனக்பூரில் அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்கள் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டவை என்றும், அதைச் சாத்தியப்படுத்துவதில் கட்கரியின் செயலுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் முதலமைச்சர் தாமி கூறினார்.
உத்தரகாண்ட் மாநிலத்தின் வளர்ச்சிக்கு அனைத்து உதவிகளையும் வழங்க, அவர் எப்போதும் தயாராக இருக்கிறார். நாங்கள் கேட்பதற்கு முன்பே நாங்கள் விரும்புவதைப் பெறுகிறோம் என்றும் தாமி குறிப்பிட்டார்.