கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம், கோழிக்கோடு மற்றும் கண்ணூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு, வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கேரளா மாநிலத்தில் ஏப்ரல், மே மாதங்கள் கோடை காலமாகும். இந்த மாதங்களில் அதிகபட்சமாக 39 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும். கோடை மழையால் வெப்பம் தணியும். ஆனால், இந்த வருடம் கடந்த பிப்ரவரி மாதம் துவக்கத்திலேயே, கேரளா முழுவதும் வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது.
குறிப்பாக, திருவனந்தபுரம், கோட்டயம், ஆலப்புழா, கோழிக்கோடு, கண்ணூர், பாலக்காடு, புனலுார் உள்ளிட்ட இடங்களில் 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனால், பொது மக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில், வழக்கத்தை விட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்பதால் திருவனந்தபுரம், கோழிக்கோடு மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.