ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் காஜுவாக்காவில் தனியார் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த கல்வி நிறுவனத்தில் திடீரென இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
அந்த மூன்று மாடி கட்டிடத்தில் 2-வது, 3-வது மாடியில் தீ கொளுந்துவிட்டு எரிந்தது. மேலும் இந்த தீ அதே கட்டிடத்தில் உள்ள உணவகம் மற்றும் நகைக்கடைகள் அமைந்துள்ள கட்டிடங்கள் இருக்கும் இடங்களிலும் பரவியது.
உடனடியாக இந்த தீ விபத்து குறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இரண்டு தீயணைப்பு வாகனங்களுடன் வந்த தீயணைப்பு துறையினர் வெகு நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து ஏற்படும்போது கட்டிடத்தில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
விபத்துக்கான காரணம் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. மேலும் கல்வி நிறுவனத்தில் மாணவர்களுக்கு இன்னும் 2 நாட்களில் தேர்வு நடைபெற இருந்த நிலையில் இந்த தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.