காஸா மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழகத்திற்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் நீளத்திற்கு ஒரு பெரிய சுரங்கப்பாதையை இஸ்ரேல் இராணுவ வீரர்கள் கண்டுபிடித்து, அதன் பெரும் பகுதியை அழித்துள்ளனர்.
பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரை இஸ்ரேல் தொடங்கியது. இந்த போரில் விமானப்படை, கப்பல்படை, தரைப்படை என முப்படைகளையும் ஏவிவிட்டு நடத்தி வரும் தாக்குதலில் காஸா நகரமே உருக்குலைந்து போய்க் கிடக்கிறது.
இந்த போரில் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு சரியான பதிலடியை இஸ்ரேல் கொடுத்து வருகிறது. காஸாவில் ஹமாஸ் தீவிரவாதிகள் பல்வேறு சுரங்கங்களை அமைத்து வைத்துள்ளனர். இந்த சுரங்கங்களில் பதுங்கி இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் மீது, தீவிரவாதிகள் தாக்கதல் நடத்தி வருகின்றனர். இதனால், அந்த தீவிரவாதிகளுக்கு எதிரான போரானது தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்நிலையில், காஸா மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழகத்திற்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் நீளத்திற்கு ஒரு பெரிய சுரங்க பாதையை இஸ்ரேல் இராணுவ வீரர்கள் கண்டறிந்து உள்ளனர்.
இதில், கழிவறைகள், ஆயுதங்களை பதுக்கி வைக்கும் கொள்கலன் வசதிகள் மற்றும் போருக்கான ஆயுதங்கள் ஆகியவை இருந்துள்ளன. அந்த சுரங்கத்தின் நுழைவு வாயில் பகுதிகளை இஸ்ரேல் படையினர் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் சுரங்கத்தின் பெரும்பகுதியை அழித்தனர்.