செங்கடல் பகுதியில் கடந்த 18-ஆம் தேதி ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய வான்வழி தாக்குதலில், பலத்த சேதமடைந்த வணிக கப்பல், நேற்று கடலில் மூழ்கியது.
பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் நாட்டின் மீது கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரை இஸ்ரேல் தொடங்கியது. இந்த போரில் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு சரியான பதிலடியை இஸ்ரேல் கொடுத்து வருகிறது.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் ஏமனில் செயல்படும் ஹவுதி தீவிரவாதிகள், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக உள்ளனர். இதனால், செங்கடல் வழியாக செல்லும், இஸ்ரேலுக்கு ஆதரவான நாடுகளின் கப்பல்கள் மீது ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
ஹவுதி தீவிரவாதிகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும், செங்கடலில் ஹவுதி தீவிரவாதிகளின் தாக்குதலைத் தடுக்க, அங்கு அமெரிக்கா போர் கப்பல்களை நிலை நிறுத்தியுள்ளது. இருந்தபோதிலும், ஹவுதி தீவிரவாதிகள் அதைக் கண்டு கொள்ளாமல், செங்கடலில் வரும் கப்பல்கள் மீது தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, கடந்த மாதம் 18-ஆம் தேதி ஏடன் வளைகுடா அருகே செங்கடலில் சென்று கொண்டிருந்த ரூபிமர் என்ற சரக்கு கப்பல் மீது ஹவுதி தீவிரவாதிகள் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில், கப்பல் பலத்த சேதமடைந்தது. தாக்குதலை தொடர்ந்து மாலுமிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். கப்பல் அதே பகுதியில் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கி கொண்டிருந்தது. இந்நிலையில், அந்த கப்பல் நேற்று கடலில் மூழ்கியது.